தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

ஏழாம் அறிவு - படைப்பின் அடிப்படைகளைப் புறக்கணிக்கும் சினிமா

Sunday, November 13, 2011



கருணாகரன்

சில காலங்களுக்கு முன்னர் ‘ஆறாந்திணை’ என்று புதியதொரு திணையைப் பற்றிச் சேரன் அறிமுகப்படுத்தினார். தமிழில் அதுவரை ஐந்து திணைகளைப் பற்றியே பேசப்பட்டு வந்தது. புலம்பெயர்ந்து வாழும் புதிய களத்தைச் சேரன் ஆறாந்திணை என்றார். அந்த ஆறாந்திணையின் அனுபவங்களும் அறிகையும் ஒரு வடிவமாகி, இன்று தமிழுடன் இணைந்து விட்டன. அதற்கு முன்னர் தமிழர்களின் வாழ்வியற் பரப்பும் வாழ்வனுபவங்களும் பெரும்பாலும் ஐந்து திணைகளுக்குள்தான் இருந்தன. குறிப்பாகப் பனி விழும் பருவ மற்றும் பிரதேச அனுபவங்கள் முன்னைய தமிழ் வாழ்வில் இருக்கவில்லை. ஆனால், இன்று அந்த அனுபவங்கள் தமிழில் தாராளமாகவே உள்ளன. ஒரு படைப்பாளியின் நுண்ணுணர்கை இதைச் சரியாக முன்னுணர்ந்தது.

இப்பொழுது ஆறறிவு என்று சொல்லப்படுவதற்கு அப்பால், இன்னொரு புதிய அறிகையை ‘ஏழாம் அறிவு’ என்று உணர்த்தும் பாவனையில் பல வகையான முன்னறிவித்தல்கள், விளம்பரப்படுத்தல்களுடன் தமிழ்ச் சினிமா ஒன்று வந்துள்ளது. தொடர்ந்து இந்தப் படத்தைப் பற்றிய விமர்சனங்கள் பலவும் வந்து கொண்டேயிருக்கின்றன. சில விமர்சனங்கள் சற்று நிதானமானவை. பலதும் உணர்ச்சிகரமானவை. ஒரு நண்பர் சொல்வதைப் போல ‘ஏழாம் அறிவைப் பற்றி ஐந்தறிவுத்தனமாகப் பேசுகிறார்கள்’ பலரும்.

ஏனைய வழமையான தமிழ்ப் படங்களைப் போலவே வியாபார நோக்கத்தை முதன்மையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது ஏழாம் அறிவு. பெரும்பாலான - சாதாரண தமிழ்ச்சினிமா வாய்ப்பாட்டை அப்படியே பேணியுள்ளது ஏழாம் அறிவு. (டூயட்) பாடல்கள், காதல், சண்டைக்காட்சிகள், கொஞ்சம் நகைச்சுவை.... அப்படி வியாபார நோக்கத்தை அடிப்படையாகக் கொள்ளும்போது அதற்குத் தோதாக ஒரு எல்லைவரையில் ‘இன உணர்வு’ என்ற அம்சமும் கலக்கப்பட்டுள்ளது. இந்த ‘இன உணர்வு’ என்ற அம்சம்தான் இங்கே வியாபாரத்துக்கான ஒரு முக்கிய உத்தியாக இந்தப் படத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளது. இதை வெற்றிகரமாகச் சாத்தியப்படுத்தியிருக்கிறார் இயக்குநர் முருகதாஸ். முருகதாஸ் தமிழ்ச் சூழலை நன்றாகவே விளங்கி வைத்திருக்கிறார் என்பதற்கு இந்தப் படம் நல்ல ஆதாரம்.
எதையும் மேலோட்டமாகப் பார்க்கும் இயல்பைக் கொண்;டவர்கள் தமிழர்கள். இன உணர்வு என்று வந்து விட்டாற்போதும் அதற்குப் பிறகு அவர்கள் எதையும் நிதானிக்க மாட்டார்கள். இந்த இன உணர்வைக் கொண்டாடுவதற்காகவே ஒரு பெரிய கூட்டம் இருக்கிறது. பெரும்பாலான தமிழ் ஊடகங்கள் இன உணர்வு என்ற விசயத்துக்காக இலவசமாகவே பிரச்சாரம் செய்யும். அதன்மூலம் மேலதிகமான ஆதரவை வழங்கும். எதிராக வருகின்ற விமர்சனங்களையும் அபிப்பிராயங்களையும் தாமாகவே முன்னின்று கட்சி கட்டிக்கொண்டு எதிர்த்து முறியடிக்க முயற்சிக்கும். இந்த நிலையில் படத்தைப் பற்றிய பேச்சுகளும் அறிமுகங்களும் தாராளமாக, தானாகவே நடந்து கொண்டிருக்கும். மேலும் இந்த இன உணர்வு என்ற அம்சம் நிச்சயமாக ஒரு பெருந்தரப்பினரின் அபிமானத்தைப் பெற்றுத் தரும். அது மட்டுமல்ல புலம்பெயர்ந்திருக்கிற ஈழத்தமிழர்கள் மற்றும் வெளிநாடுகளில் வசிக்கின்ற இந்தியத்தமிழர்களிடையேயும் இந்த இன உணர்வு என்ற விசயம் பெரிதாக எடுபடும். அவர்கள் தாம் பிறந்த நாட்டுக்கு வெளியே இருப்பதால், சொந்த நாட்டைப் பற்றியும் தமிழரின் சிறப்பைப் பற்றியும் ஏதாவது செய்திகள் வரும்போது அது அவர்களைக் கவர்ந்து விடுகிறது. தங்களுடைய சூழலுக்கு வெளியே – அந்நியச் சூழலில் இருப்பதன் காரணமாக உருவாகியிருக்கும் ஒரு வகையான உளவியல் இது.

நாட்டுக்கு வெளியே இருப்பவர்களிற் பெரும்பாலானவர்களின் உளவியல் இந்தமாதிரித்தான் செயற்படுகிறது என்பதற்கு இணையத்தளங்களிலும் முகப்புத்தகங்களிலும் எழுதப்பட்ட – எழுதப்பட்டு வரும் - கருத்துகள் ஆதாரம்.

ஆகவே இந்த மாதிரியான விசயங்களை எல்லாம் கணக்கில் எடுத்துக்கொண்டு, அதற்குத் தோதாக இந்தப் படத்தை எடுத்துள்ளார் முருகதாஸ்.

அந்த வகையில் ‘ஏழாம் அறிவு’ இரண்டு நிலைகளிலும் படத்தை உருவாக்கியவர்களுக்கு வெற்றியே. முருகதாஸ் கூட்டணி எதிர்பார்த்ததைப்போல ‘ஏழாம் அறிவு’ தமிழ்ப் பரப்பில் வெற்றிகரமாக அறிமுகமாகியுள்ளது. பொருளாதார ரீதியாகவும் வெற்றியடைந்துள்ளது.
ஆனால், தமிழ்ப் பரப்பில் இந்தப் படத்தைப் பற்றி நிகழ்த்தப்படும் கொண்டாட்டங்கள் மிக உணர்ச்சி வசப்பட்ட நிலையில் நிகழ்கின்றமை மிகுந்த கவலையையே அளிக்கின்றன. இந்தக் கொண்டாட்டங்கள் நமது நண்பர் சொன்னதைப் போல ஐந்தறிவுத்தனமானவையாகவே அமைந்துள்ளன. ஆகவே இந்தப் பத்தி அந்த நிலைமையைப் பற்றியும் ஏழாம் அறிவு திரைப்படத்தின் அடிப்படையைப் பற்றியும் தன்னுடைய பார்வையை முன்வைக்க முயற்சிக்கிறது.

00

ஏழாம் அறிவு ஒரு பக்கத்தில் தமிழர்களின் அறிவையும் வீரத்தையும் பண்பாட்டுச் சிறப்பையும் பேசுகிறது. மறுபக்கத்தில் அத்தகைய வரலாற்றுச் சிறப்பையுடைய தமிழின் நிலையும் தமிழர் வாழ்வும் இன்று வீழ்ந்து பட்டிருக்கிறது என்பதையும், இந்த நிலையை மாற்ற வேண்டும் என்றும் வலியுறுத்துகிறது. இதற்காக அது தமிழரின் வரலாற்றுக் குறிப்பொன்றைப் பின்தொடர்ந்து தனக்கான வடிவத்தை உருவாக்கியுள்ளது.

இந்த அடிப்படையில், தமிழ் நாட்டின் காஞ்சிபுரத்தில் பல்லவ இளவரசனாகிய போதி தர்மர், மருத்துவம், வர்மக்கலை போன்றவற்றில் அசாத்தியமான திறமையைப் பெற்றிருந்தார். இவருடய ஆற்றல் சீனாவரை பரவிப் புகழடைந்திருந்தது. இப்போதும் சீனர்கள் போதி தர்மரை மதித்து வணங்குகின்றனர். அத்தகைய சிறப்பையும் பெருமையையும் கொண்ட தமிழர்கள் இன்று தோற்றுப் போனவர்களாகவும் தோற்கடிக்கப்பட்டவர்களாகவும் இருக்கின்றனர் என்பதே படத்தின் மையப் பேசுபொருள்.

இன்று இந்தப் படம் வெளிவந்ததற்குப் பிறகு, ஏராளம் கவனக்குறிப்புகள் எழுதப்பட்டு வருகின்றன. குறிப்பாகப் போதி தர்மரைப் பற்றி. படம் வலியுறுத்தும் தமிழி உணர்வைப் பற்றி. தமிழ்த் தேசியத்தின் எழுச்சியைப் பற்றி. இத்தகைய கவனக்குறிப்புகளை எழுதத் தூண்டியதில் இந்தப் படத்துக்கும் இயக்குநர் முருகதாஸ_க்கும் ஒது முக்கியத்துவம் உண்டு.
வரலாற்றுணர்வை ஏற்படுத்தியதிலும் வரலாறு பற்றிய அறிவு முக்கியமான ஒன்றென்றும், வரலாற்றில் எண்ணற்ற புதினங்களும் முக்கிய அம்சங்களும் உள்ளன என்றும் கருதும் நிலையை இளைய தலைமுறையினரிடத்திலே ஏற்படுத்த முனைந்ததிலும் முருகதாஸ் கவனத்தைப் பெறுகிறார்.

அதேவேளை இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையில் ஒரு முரண் நீண்டகாலமாகவே உள்ளதென்றும் இனி அது கூர்மையடைக் கூடிய நிலை உண்டென்றும் முருகதாஸ் உணர்த்துகிறார். மேலும் ஈழத்தமிழரின் போராட்டத்தை – புலிகளை ஒடுக்குவதில் தனியே இலங்கை அரசு என்ற ஒரு சக்தி மட்டும் ஈடுபடவில்லை. பல நாடுகள், பல சக்திகள் சம்மந்தப்பட்டிருந்தன என்றும் சொல்கிறார் முருகதாஸ். அவருடைய புரிதல்கள் சரியான பார்வையைக் கொண்டுள்ளன.

ஆனால், அதற்கப்பால், படத்தின் முழு வடிவமானது முருகதாஸ் என்ற கலைஞனைக் குறித்த கேள்விகளையும் ஒரு சினிமா என்ற படைப்பின் மீதான விமர்சனங்களையும் முன்வைக்கக் கோருகிறது.

‘தமிழ் அறிவையும் வீரத்தையும் இழந்து இன்று வீழ்ந்து பட்டிருக்கிறோம். அண்மையில் இலங்கையில் நடந்த போரிலும் தமிழர்கள் தோற்கடிக்கப்பட்டிருக்கிறார்கள். தமிழர்களின் வீரம் தோற்கடிக்கப்பட்டுள்ளது. இது ஏற்றுக்கொள்ளவே முடியாதது. தமிழ் வீரத்தை மீட்டெடுத்து மீண்டும் எழுச்சிபெறும் தமிழ் வாழ்வையும் வரலாற்றையும் உருவாக்க வேண்டும். அப்படி உருவாக்க முடியும். அதற்கான அடிப்படைகள் வரலாற்றிலும் விஞ்ஞானத்திலும் நிச்சயமாகவே உண்டு’ என்று சொல்லும் இந்தப் படத்தைப் பற்றி மெய்சிலிர்த்துப் பலரும் பக்கம் பக்கமாக எழுதுகிறார்கள். பாராட்டுகளைப் பொழிந்து தள்ளுகிறார்கள். படத்தைப் பார்த்து உற்சாகப்படுத்துங்கள் என்று இணைய வழியாகவும் தொலைபேசிகளின் ஊடாகவும் தூண்டற்செயற்பாடுகள் தொடர்கின்றன. முருகதாஸ் தமிழ்த் தேசியத்தின் தூண்களில் ஒருவராக சித்திரிக்கப்படுகிறார்.

ஏழாம் அறிவு மையப்படுத்தும் இந்தக் கருத்தைப் பலரும் பல விதமாகத் தொடர்ந்து பேசியும் எழுதியும் வெளிப்படுத்தியும் வருகிறார்கள். போதி தர்மனின் கதையைத் தவிர்த்து. பதிலாக சங்ககாலத்திலிருந்து சோழர் காலம் உள்ளடங்கலாக தமிழரின் பொற்காலங்களை ஒவ்வொருவரும் நினைவு கூர்ந்திருக்கிறார்கள். (சாண்டில்யனின் ‘கடற்புறா’ தனக்கொரு தூண்டலைத் தந்ததாகவும் அத்தகைய வரலாற்று நூல்களுக்கு எப்போதும் முக்கியத்துவம் உண்டென்றும் விடுதiலைப் புலிகளின் தலைவர் திரு. வே. பிரபாகரன் கூறியிருந்ததை இங்கே நாம் இணைத்துப் பார்ப்பது பொருத்தம்). மேலும் ‘புகழுடைத் தமிழன் பிணியிடை வீழ்ந்து கிடப்பதோ’ என்றவாறாக.

ஆகவே படத்தின் செய்தி ஒன்றும் புதியதல்ல. ஆனால், இந்தக் கருத்தை சற்று வேறு விதமாகக் கொஞ்சம் கவர்ச்சிகரமாக, சினிமா என்ற வெளிப்பாட்டுச் சாதனத்தின் தன்மைக்கேற்ப புதிதாக – மீண்டும் சொல்லியிருக்கிறார் முருகதாஸ். அதற்கு அவர் எடுத்தாண்ட ஆயுதங்களில் ஒன்று வரலாற்றிலிருந்து போதி தர்மர். மற்றும் விஞ்ஞானத்திலிருந்து மரபணுத் தொழிற்பாடு.
மற்றது, கவனத்திற்காக அவர் இலங்கையில் நடந்த போரையும் அங்கே நடந்த அநீதியையும் சாரப்படுத்திச் சொல்லும் விதம்.

‘தமிழன் எல்லா இடத்திலும் அடிவாங்குகிறான். இலங்கையில், தமிழ் வீரத்தை ஒரு நாடு மட்டும் மோதித் தோற்கடிக்கவில்லை. ஒன்பது நாடுகள் சேர்ந்து தோற்கடித்தன’ என்ற மாதிரியான விசயங்கள் இன்றைய நிலையில் தமிழ் மக்களிடையே அதிக தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியன. வன்னிப் போரின்போது நடந்த கொடுமைகள் உலகெங்கும் உள்ள தமிழ்மக்களின் மனதில் பெருந்துயரத்தை ஏற்படுத்தியது. அந்த துயர நிலையிலிருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை. பதிலாக அவர்கள் இன்னும் அந்த நிகழ்வுகளின் தாக்கத்தைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் சனல் 04 ஐயும் ஐ.நா நிபுணர் குழு அறிக்கையையும் வரவேற்கிறார்கள். மேலும் போர்க்குற்ற விசாரணையைப் பற்றியும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆகவே இந்த நிலையில், படத்தில் பேசப்படும் சமகால ஈழ நிலவரம், தமிழர் நிலவரம் ஆகியவற்றைப் பற்றிய பேச்சு திரையில் வரும்போது அது அதிக கவர்ச்சியைக் கொடுக்கிறது. இதுகூட ஆற்றாமையின் வெளிப்பாடுதான். உள்ளுக்குள்ளே கொதித்துக் கொண்டிருக்கும் கோபத்துக்கான ஒரு வடிகால்.

ரஜனியின் படங்களில் அவர் பேசுகிற ‘பஞ்ச்’ வசனங்களைப் போல இந்த வசனங்களைச் பேசுகிறார் சூர்யா. ரஜனியின் வசனங்கள் அரசியலில் பாதிப்படைந்தவர்களின் உளவியலை மையப்படுத்தியதாக இருக்கும். அல்லது சமூகத்தில் பாதிக்கப்பட்டவர்களின் உளவியலை மையப்படுத்தியதாக இருக்கும். இந்த உபாயத்தையே முருகதாஸ_ம் பயன்படுத்தியுள்ளார்.
‘இந்த உலகத்துக்கே எல்லாவற்றையும் சொல்லிக் கொடுத்தவர்கள் தமிழர்கள்;’ என்று சொல்வதெல்லாம் உணர்ச்சி வசப்படும் தமிழபிமானிகளின் உச்சியிற் குளிரைக் கொட்டுகிறது. குளிர் நாடுகளில் உள்ளவர்களுக்கு உடம்பிற் சூடேற்றுகிறது. ஆகவே இவர்கள் கைகளைத் தட்டி ஆரவாரப்படுத்துகிறார்கள்.

தமிழர்களிடம் சிறப்புகளும் தகுதிகளும் ஏராளம் உள்ளன. செழுமையான வரலாற்றையும் பண்பாட்டையும் கொண்டவர்கள் தமிழர்கள் என்பதிற் பிரச்சினையில்லை. இவையெல்லாம் உண்மையே. ஆனால், அதேயளவுக்கு அவர்களிடமும் ஏராளம் குறைபாடுகள் உள்ளன. அந்தக் குறைபாடுகளே தமிழர்களைத் தோற்கடித்துக் கொண்டிருக்கின்றன. இதை ‘ஏழாம் அறிவு’ புலப்படுத்தியிருக்குமானால், அதுவே பயனுடையதாக இருந்திருக்கும். அது ஓரளவுக்கு புதிய சேதியாகவும் அவசியமான ஒன்றாகவும் தமிழ்ச் சினிமாவின் பார்வையாளர்களுக்குப் பிரயோசனமாகவும் அமையும். அல்லது ஏழாம் அறிவை முன்வைத்து இந்த விசயங்களைப் பேசியிருந்தாலும் வரவேற்றிருக்கலாம். ஆனால், அப்படியெதுவும் நிகழவில்லை. அப்படி முன்வைக்கப்பட்ட விமர்சனங்களை எதிர் மனோபாவத்தோடு அணுகும்போக்கே தொடர்கிறது. இதுவே தமிழ்ச் சூழலில் நிலவும் வீழ்ச்சிக்கான கருவறைச் செயற்பாடாகும்.
ஆகவே இந்த அகப் புற நிலைமையில் ஏழாம் அறிவைக் குறித்து மேலும் பேசும்போது இது தொடர்பாக நாம் சில கேள்விகளை இங்கே முன்வைக்கலாம்.

1. இந்தப் படத்தைப் பார்க்கும் பிற மொழி பேசும் இந்தியர்களின் நிலைப்பாடு என்ன?

2. இந்தப் படத்தைப் பார்க்க நேரும் சீனர்கள் எத்தகைய மனநிலையைப் பெறுவர்?

3. தமிழர்கள், இந்தியர்கள், சீனர்கள் என்ற பரப்புக்கு வெளியே இந்தப் படத்தைப் பார்க்கும் பார்வையாளர்களின் மனநிலையும் புரிதலும் எவ்வாறிருக்கும்?

இந்தப் படம் ஏனைய இந்தியச் சமூகத்தினரையும் விட தமிழர்கள் வீரம் பொருந்தியவர்கள், அறிவிற் சிறந்தவர்கள் என்பதைக் காட்டுகிறது. சீனாவிற் பவியிருந்த கொள்ளை நோயினால் இந்தியாவுக்கே ஆபத்து வரும் என்று தெரிந்து, அதைக் கட்டுப்படுத்தவே போதி தர்மர் அங்கே செல்கிறார். ஆகவே, தமிழர்கள் அந்தக் காலத்திலேயே இந்தியாவை ஆபத்துகளில் இருந்து காப்பாற்றுவதற்காகப் பாடுபட்டிருக்கிறார்கள். எனவே அவர்களுக்கே வரலாற்றில் முதன்மைப் பாத்திரமுண்டு என்று கூறுவது.

அதேவேளை இப்போதும் சீனாவினால் இந்தியாவுக்கு வரவுள்ள ஆபத்தை தமிழர்களே இனங்கண்டு அதை முறியடிக்கிறார்கள். வரலாற்றின் நாயகனான போதி தர்மர் (சூர்யா) வரலாற்றை ஆய்வு செய்யும் தமிழ் மாணவியான ஸ்ருதி ஹாசன், தற்போது இந்த ஆபத்தை முறியடிக்கக்கூடிய நிலையில் போதி தர்மரின் வம்சத்தில் இருக்கும் இளைஞன் (சூர்யா). ஆகவே இந்தியாவைக் காப்பாற்றும் பிரதான பாத்திரத்தை எப்போதும் வகிப்பவர்கள் தமிழர்களே என்ற சித்திரத்தை உருவாக்க முனைதல்.

இது ஏனைய இந்தியர்களைக் கலவரப்படுத்தக் கூடியது. இந்தியப் பண்பாட்டிலும் பிராந்திய வாழ்க்கையிலும் அதனுடைய அரசியல் மற்றும் அறிவியலிலும் பிற சமூகங்களுக்கும் பங்களிப்புகள் உண்டு. ஆனால், தங்களுடைய அத்தகைய பங்களிப்புகளையும் ஆற்றலையும் இந்தப் படம் திட்டமிட்டு மறைப்பதாகவே அவர்கள் உணர்வர். இது அவர்களை நிச்சயமாக எதிர்நிலைக்குக் கொண்டு போகும்.

ஆகவே பிற இந்தியச் சமூகங்களுக்கிடையிலான விரிசல்களையும் முரண்களையும் ஏற்படுத்தக் கூடிய கூறுகளை ஏழாம் அறிவு கொண்டுள்ளது. ஒரு கலைப்படைப்பு கலகத்தை ஏற்படுத்த வல்லது. மனதில் ஏற்படுத்தும் கலகமே எழுச்சிக்கும் தூண்டலுக்கும் வழிசெய்யும். ஆனால், அது முரண்களை ஏற்படுத்தக் கூடாது. முரண்களையும் விரிசல்களையும் உருவாக்குவது கலைஞனுடைய செயற்பாடும் அல்ல. அநீதிக்கு எதிரான குரலும் பதிவும் வேறு. முரண்களை உருவாக்கும் அடிப்படை வேறு. இரண்டையும் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும்.
இங்கே முருகதாஸ் பிளஸ் ஏழாம் அறிவு ஆகிய இரண்டு பாத்திரங்களும் இந்தியச் சமூகங்களிடையேயும் முரண்களை உருவாக்குகின்றன. அதேபோல சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான முரண்களைப் பகை உணர்வுடன் நோக்குவதன் மூலமாக இருக்கும் முரண்கள் மேலும் கூர்மைப்படுத்தப்படுகின்றன.

எனவே ஒரு கலை ஊடகம் என்ற வகையில் ஏழாம் அறிவின் தூண்டல் தமிழர்களை அடிப்படை வாதத்தை நோக்கித் தள்ளும் அதேவேளை, பிற சமூகங்களை எதிர்நிலைக்குத் தள்ளுவதால், படைப்பின் அடிப்படையில் இருந்து வீழ்ச்சியடைகிறது.

இதற்கு மேலும் ஆதாரமாக நாம் முன்வைப்பது, இந்தப் படம் கூறும் பகுதிகளையே.
போதி தர்மன் காலத்தில் இருந்து இன்றுவரையிலும் சீனர்கள் அறிவிற் குறைந்தவர்கள் என்றும் சுயநலக்காரர்கள் என்றும் தங்களின் நலனுக்காக இந்தியாவை அவர்கள் அழிக்க நினைக்கிறார்கள் என்றும் காட்டப்படுகிறது.

போதி தர்மர் சீனாவுக்குப் போகும்போது சீனக்கிராமமொன்றில் மக்களின் வாழ்க்கை மிக மோசமாக உள்ளது. அவர்கள் அங்கே நிலவும் ஒரு கொடிய நோய்க்குப் பலியாகிக் கொண்டிருக்கின்றனர். அந்த நோயிலிருந்து மீள்வதற்கான வழியை சீனாவில் யாரும் காட்டவில்லை. அதேவேளை அங்கே செல்லும் போதி தர்மனின் வருகை சீனாவுக்கு ஆபத்தானது என்று அங்குள்ள ஞானிகளும் சோதிடர்களும் சொல்கின்றனர். இந்தக் கூற்றை நம்பிய சீன மக்கள் போதி தர்மரைப் பற்றித் தவறாகப் புரிந்து கொண்டு அவரை வெறுக்கின்றனர்.

ஆனாலும் தன்னுடைய மருத்துவ அறிவினால் அந்த நோயைக் கட்டுப்படுத்துகிறார் போதி தர்மர். அதற்குப் பிறகும் அந்த மக்கள் போதி தர்மரைப்பற்றிப் புரிந்து கொள்ளவில்லை. அதனால் அந்த மக்களை விட்டு அவர் வெளியேறுகிறார். தான் வெளியேறும்போது அந்தக் கிராமத்துக்கு இன்னொரு ஆபத்து வரப்போகிறது என்பதை போதி தர்மர் சொல்கிறார். அது மனிதர்களால் வருகின்ற ஆபத்து. வேற்றாள்களின் படையெடுப்பால் வரும் ஆபத்து.
அந்த ஆபத்தைக் கட்டுப்படுத்தக் கூடிய ஆற்றல் அந்தக் கிராமத்திற்கில்லை. அதனால் வேற்றாள்களினால் அந்தக் கிராமம் சிதைக்கப்படுகிறது. இந்த நிலையில் போதி தர்மரே தன்னுடைய வர்மக்கலையின் மூலமாக பெற்றுக்கொண்ட தற்காப்பு மற்றும் போரிடும் ஆற்றலின் மூலம் அந்த ஆபத்தைத் தனியொருவராக நின்று முறியடிக்கிறார். அதற்குப் பிறகே அந்த மக்களுக்கு போதி தர்மரைப் பற்றிய புரிதல் ஏற்படுகிறது. பிறகு அவர்கள் அவரை நேசிக்கின்றனர். அவரிடமிருந்து அவர்கள் மருத்துவத்தையும் வர்மக்கலையையும் கற்றுக்கொள்கின்றனர்.

ஆனால், ஒரு கட்டத்தில் போதி தர்மர் இந்தியாவுக்கு – காஞ்சிபுரத்துக்குத் திரும்ப வேண்டியேற்படுகிறது. அதற்கு அவர் ஆயத்தமாகிறார். ஆனால் போதி தர்மர் அங்கிருந்து வெளியேறினால் தமக்கு ஆபத்துகள் நேரிடும். நோயோ பிற நெருக்கடிகளோ வராமல் தடுக்கும் வல்லமையுள்ள அவரை எந்த நிலையிலும் வெளியேறுவதற்கு அனுமதிக்க முடியாது என்று அங்குள்ள முதியோர் சொல்கின்றனர். இதனையடுத்து போதி தர்மருக்கு விசம் கொடுத்து அவரைக் கொல்ல முயற்சி செய்கின்றனர். போதி தர்மர் இறந்தால், அவருடைய சடலத்தை தங்களுடைய மண்ணிலே புதைத்து விடலாம். அப்படி அந்தச் சடலம் புதைக்கப்பட்டால் தமக்கு எத்தகைய தீங்குகளும் நேராது என்ற நம்பிக்கை சீனர்களுக்கு.

ஆகவே போதி தர்மருக்கு நஞ்சூட்டப்படுகிறது. ஆனால், தனக்கு நஞ்சைத் தருகிறார்கள் என்பதைப் போதி தர்மர் அறிந்து விடுகிறார். ஆனாலும் அதைத் தெரிந்து கொண்டே அவர் அந்த நஞ்சினை அருந்தி இறந்து விடுகிறார். அவருடைய சடலம் அங்கே புதைக்கப்படுகிறது.
என்ன அபத்தம் இது?

சீனர்கள் மூடர்களாகவும் வஞ்சகக்காரர்களாகவும் இருக்கிறார்கள். தங்களுடைய சுய நன்மைக்காகத் தங்களைக் காப்பாற்றியவருக்கே நஞ்சூட்டும் காரியத்தைச் செய்யும் ஒரு மக்கட்கூட்டமே சீனச் சமுதாயம் என்று முருகதாஸ் சொல்கிறார். அதை ஏனைய தமிழ்ப் பெருங்குடி மக்கள் உளம் பூரித்து வரவேற்கிறார்கள். பொதுவாக அநேகமான இந்தியவர்களுக்கும் சீனாவைப் பற்றி இப்படிச் சித்திரிப்பதில் மகிழ்ச்சி ஏற்படலாம். ஏனெனில் பாகிஸ்தானையும் சீனாவையும் எதிர்ப்பதே இந்திய அரசியலின் பொது அடையாளங்களில் ஒன்றாகிவிட்டது.

அத்துடன் இன்று வளர்ச்சியடைந்து வரும் சீனப் பொருளாதாரமும் சீன விஸ்தரிப்பு நிலையும் இந்தியாவுக்கான அச்சுறுத்தல் என்ற வகையிலும் எதிர்காலத்தில் சீனாவும் இந்தியாவும் பொருதிக் கொள்ளக்கூடிய வாய்ப்புகள் ஏற்படலாம் என்று கருதப்படும் நிலையிலும் சீனாவைப் பற்றிய முருகதாஸின் சித்திரிப்பு விரும்பப்படும்.

இத்தகைய சித்திரிப்பு முறைகள் அல்லது காண்பித்தல்கள் அமெரிக்க ஹொலிவுட் படங்களிலும் தாராளமாக இருப்பதுண்டு. எல்லாவற்றிலும் எப்பொழுதும் வல்லவர்கள் - விண்ணர்கள், அமெரிக்கர்கள் என்ற மாதிரி அந்தப் படங்கள் இருக்கும். ஏறக்குறைய இதேபோன்ற படங்களை அர்ஜூனும் விஜயகாந்தும் தாராளமாகவே நடித்திருக்கிறார்கள். இந்தியாவைக் காட்டிக்கொடுக்கும் துரோகப் பாத்திரங்களில் நடிக்காத வில்லன் நடிகர்களே தமிழில் இல்லை எனலாம். இங்கும் அதே கதைதான்.

இதை விட தமிழ்ப் பொது வெளியில் நிலவும் அரசியற் புனைவுகளுக்கு நிகராக இந்திய, சீனப் பிராந்தியத்தில் மிகப் புத்திபூர்வமாகவும் வீரத்தோடும் இருந்தவர்கள் தமிழர்களே என்பதைப் படம் வலியுறுத்துகிறது.

அவ்வாறு வலியுறுத்துவதாயின் ஏனைய இனத்தவரையும் விடத் ‘தமிழர்கள் மேலோங்கிகள்’ என்ற பொருளை இது மறைமுகமாகச் சொல்கிறது. இது அடிப்படைவாதத்தின் மூலக்கூறாகும். பிற சமூகங்களைக் கீழிறக்கிச் சுருக்கியும் தம்மை மேல்நிலைப்படுத்தி விரித்தும் பேசும் எவரும் அடிப்படைவாதத்தின் கூறுகளையே கொண்டிருப்பர்.

தமிழ் அரசியலிலும் அதனுடைய பொதுச் சமூக உளவியலிலும் ஊடுருவிப் பரந்திருக்கும் கொடிய நோய் இது. இந்த நோயே தமிழர்களைத் தோற்கடித்துக் கொண்டிருக்கிறது. தமிழர்கள் தங்களை விட ஏனையவர்கள் கீழானவர்கள், சிறியர்கள் என்ற சொல்லும்போதெல்லாம் ஏனையவர்கள் அவர்களை விட்டுத் தூர விலகி நிற்கின்றனர். பல வேளைகளிலும் எதிர்நிலைக்குச் சென்று விடுகின்றனர்.

முருகதாஸ் சொல்ல வருவதைப் போல அல்லது படத்தில் சூர்யா சொல்வதைப் போல ஒன்பது நாடுகள் சேர்ந்து மட்டும் தமிழர்களைத் தோற்கடிக்கவில்லை. தமிழர்களிடம் உள்ள இந்தக் குறைபாடும் சேர்ந்தே அவர்களைத் தோற்கடிக்கிறது. தங்களைப் பற்றிய அதீதமான புனைவுகளும் மிகை எண்ணங்களு ம் சேர்ந்தே அவர்களைத் தோற்கடிக்கிறது. ஈழத்தில் நடந்த போராட்டத்தின் போதும் விடுதலைப் புலிகளின் மிக வலிமையான போராட்டத்தை அந்தப் போராட்டத்திலிருந்து பலவீனமான கூறுகளே தோற்கடித்தன. ஏனெனில் முரண்களை உருவாக்குவதன் மூலம் பகைமையைப் பெருக்கி, பகைவர்களையும் உருவாக்கும் ஒரு பொறிமுறை தமிழ்ச் சிந்தனையில் பதிந்துள்ளது. இதுவே இந்தப் படத்திலும் பிரதானப்படுத்தப்பட்டுள்ளது. படத்தைப் பற்றிய பெரும்பாலான ஆதரவுக் கருத்துகளிலும் மையங்கொண்டுள்ளது.

ஆகவேதான் ஏழாம் அறிவைப் பார்க்கும் பிற இந்தியச் சமூகத்தினரும் சீனர்களும் தமிழர்களைப் பற்றி, தமிழர்களின் சிந்தனையைப் பற்றி நிச்சயமாக எதிர்நிலைப் புரிதலையே கொள்வர் என்று கூறுகிறேன்.

00

0 comments: