தமருகம்

தமருகம்
எஸ்போஸ் கவிதைகள்

விமர்சனங்கள்

விமர்சனங்கள்
அனாரின் " எனக்கு கவிதை முகம்"

சிறுகதை

சிறுகதை
மீட்சியற்ற நகரத்தில் செம்பகம் துப்பிய எச்சம்

அஞ்சலி

அஞ்சலி
ராஐமார்த்தாண்டன்-மரணத்தின் வெற்றிடத்திலிருந்து

இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்

Monday, August 24, 2009

சத்தியபாலான் கவிதைகள்
நிலான்
.........................................
வெளிப்பாட்டு முறையில் நவீனத்துவமிக்க இன்றைய கவிதைகள் தொடர்பான பல்வேறு குற்றச்சாட்டுக்களும் எழுந்து ஓரளவு ஓய்ந்துள்ளன. கவிதையின் புரியாமை அல்லது இருண்மைத் தன்மை பற்றிய குற்றச்சாட்டுக்களை முன்வைப்பவர்களின் வாசிப்பு முறை மரபுவழிப்பட்ட வாசிப்பு முறை என்றே சொல்ல வேண்டும். சொற்கள் தருகின்ற அனுபவவெளி விரிந்தது. வாசிப்பவனின் அனுபவமும் விரிந்ததாக இருக்கும் போதே கவிதையின் அல்லது படைப்பின் முழுமையினை எட்ட முடியும்.
தமிழிலுள்ள பழமொழிகளும் மரபுத்தொடர்களும் அவற்றின் நேரடியான அர்த்தத்தில் புரிந்து கொள்ளப்படுபவையல்ல. "அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு" என்ற பழமொழி அடம்பன் கொடியயைப் பற்றியது மட்டுமல்ல. அது தரும் நேரடியான அர்த்ததிற்கு அப்பாலும் அதற்கான வாசிப்பு மாறுபட்டதாக அமைகின்றது. கவிதையில் சொற்கள் தாம் கொண்டிருக்கும் நியமமான கருத்திற்கப்பாலும் விரிந்த பொருளைத் தருகின்றன. வாசிப்பவனின் அனுபவத்தின் எல்லை விரியும் போது கவிதையைப் புரிந்துகொள்வதில் உள்ள சிக்கல்களும் விலகுகின்றன.


ந. சத்தியபாலனின் கவிதைகள் நவீன வெளிப்பாட்டைக் கொண்டவை. அவரது "இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்" என்ற கவிதைத் தொகுப்பு வெளிவந்திருக்கிறது. சத்தியபாலன் கவிஞர் மட்டுமல்ல சிறுகதைகள், கட்டுரைகள், பத்திகள், மொழிபெயர்ப்புக்கள் என பலதிற ஆளுமை கொண்ட படைப்பாளி. வலுமிக்க சொல்லாட்சியினாலும் சொல்லல் முறையினாலும் தன் கவிதைகளுக்கான வாசிப்பை வாசகனுக்குள் பல்பரிமாணம் கொள்ள வைக்கின்றார். அவருடைய பூடகமான மொழி நிகழ்காலத்தின் வலியைப் பேசுகின்றது. பல கவிதைகள் மென்னுணர்வின் முகங்களைக் கொண்டுள்ள போதும் அவற்றின் உள்ளார்ந்த இயங்கு நிலையும் அவை கொண்டுள்ள அரசியலும் தீவிரமானவை.


காலம் பற்றிய பிரக்ஞை பூர்வமான கருத்தியல் சத்தியபாலனிடம் சரியான அர்த்தத்தில் இருக்கின்றது. புரிதலும் அதனோடு இயைந்த எல்லாவற்றையும் தன்னால் இயன்ற முழுமையிலிருந்து கொண்டு வருகின்றார். முகம் புதைத்து முதுகு குலுங்க குமுறும் அழுகையின் குரலாய் அவரது குரல் துரத்திக் கொண்டிருக்கிறது. சாமானிய மனம் நுழைய மறுக்கும் அல்லது நுழைய விரும்பாத இடங்களிலிருந்தும் கவிதைகளைத் தருகின்றார்
தன்னுலகின் மாயமுடுக்குகளுக்குள்ளும் வெளிகளுக்குள்ளும் காற்றைப்போல அலையும் சத்தியபாலன் மிதமிஞ்சிய வலிகளுடன் திரும்புகின்றார். போலிகளை நிஜமென நம்பி ஏமாறுகையில், உறவு பற்றிய உயர்ந்த எண்ணங்கள் உடைந்து சிதறுகையில் நிர்க்கதியாகும் மனநிலைக்கு சடுதியாக வந்துவிடுகின்றார். சக மனித உரையாடல்கள், புறக்கணிப்புக்கள்,மீளவியலாத போரும் அது தந்த வலிகளும், இழப்புக்களும், அலைச்சல்களும், எதையும் கவிதையாகக் காணும் மனமும் எனப் பலவித புனைவு விம்பங்களின் பதிவாக சத்தியபாலனின் கவிதைகளுள்ளன.


சத்தியபாலனின் கவிதைகளில் காணக்கிடைக்கும் நெகிழ்ச்சியும் சொல்லல் முறையும் புதிய வகையிலானவை. மெல்லிய மன அசைவியக்கத்தின் மாறுதலான தருணங்களைக் ஏற்படுத்துபவை.அவர் சம காலத்தின் துயர்மிகுந்த பயணியாக இருக்கின்றார். முக்கியமாக அலைகின்றார். சத்தியபாலனின் மொழி அலைதலின் மொழியாகின்றது. அவர் அலையும் மனத்தின் கவிஞராக இருக்கின்றார். எப்போதும் இரைச்சலிட்டுக் கொண்டிருக்கும் பொழுதுகளின் வெப்பத்தில் அவரின் மனம் உருகுகின்றது. சமகால வாழ்வும் அதையொட்டிய துயருமே மனத்தின் உருகுதலுக்குக் காரணம். முற்றிலும் போரின் அனர்த்தங்களும் விலக்கவியலா இருளாய்ப் படிந்துள்ள அவலங்களும் அநேக கவிதைகளின் மையங்களாகின்றன. "காவல், கூத்து, இன்னுமொரு நாள், இருள் கவ்வ இரத்தமாய்க் கிடந்த காலைப் பொழுது பற்றி" போன்ற கவிதைகள் காலத்தின் பிரதிபலிப்புக்களாகவுள்ளன. இந்தக் கவிதைகளின் இறுதி வரிகளில்த் தொனிக்கும் துயரம் நிழலாக தொடர்ந்து கொண்டிருப்பவை.


"வந்த காரியத்தை
துரிதமாய் முடித்து
புhதை மாற்றி வீடு வந்து சேர்கின்றேன்
வீட்டையொரு காவலென நம்பி" (காவல்)


"குளித்துப் புத்தாடை அணிந்து
போய்க் கொண்டிருந்தோரின்
கவனத்துக்கு தப்பிய கால் விரல்
இறைகளுக்குள்
ஊலர்ந்து போயிருந்தது
இரத்தம்" (கூத்து)


"மறுநாட் காலையிலும்
கோழி கூவிற்று
புறவைகள் இசைத்தன
நாள் நடந்தது
மதியம் மாலை என பொழுது முதிர்ந்து
மீண்டும் இருளாயிற்று" (இன்னுமொரு நாள்)


"இன்னுமொரு நாள்" என்னும் தலைப்பிலான கவிதையின் இறுதி வரிகள் அஸ்வகோஸின் "வனத்தின் அழைப்பு" தொகுப்பிலுள்ள ‘‘இருள்" என்னும் கவிதையின் வரிகளை ஞாபகமூட்டுகின்றது. அஸ்வகோஸ் இயல்பு குலைந்த காலத்தை


"கருணையுள்ளோரே கேட்டீரோ
காகங்கள் கரைகின்றன
சேவல் கூவுகின்றது
காற்றில் மரங்கள் அசைகின்றன
மரணங்கள் நிகழ்கின்றன" என எழுதுகின்றார்.


இருவருமே இரத்தமும் நிணமும் மணக்கும் காலத்தின் கவிஞர்கள். இருவர் கவிதைகளிலும் காலம் கொள்ளும் படிமம் ஒத்த தன்மையானதே. எனினும் கவிதை மொழியின் தனித்துவமும் கவிதையில் இவ் வரிகள் பெறும் பொருள் சார்ந்த, இடம் சார்ந்த முக்கியத்துவங்களும் வாசக மனதுக்கு மாறுபாடான அனுபவத்தைத் தருகின்றன.


சத்தியபாலனின் கவிதைகளில் அநேக சந்தர்ப்பங்களில் அழகியலின் தருணங்களைத் தரிசிக்க முடிகின்றது. அவர் காட்டும் அழகியல் சொற்களின் மேல் வலிந்து பூசப்படும் சாயங்களல்ல. கவிதைக்கான இயல்பை மேலும் வலிமையாக்கும் முறைமை கொண்டது. ஆழகிய மனத்தின் ஒருமை குலையாத படிமப் பாங்கான தன்மை கொண்டவை. இவ்வகைக் கவிதைளில் "காடு, தன்னுலகு" போன்றவை முக்கியமானவை.


"பரிதி புகாத
தடிப்பினை ஊடறுத்து
அங்கங்குள்ள
இடைவெளியூடாய்
நுழையும் ஓளி விரல்கள்
பொட்டிடும் நிலத்துக்கு" (காடு)


காட்டில் இயல்பாய்ப் படிந்துள்ள இருளை "பரிதி புகாத தடிப்பு" எனக் காட்டும் விதமும் ஒளியை விரல்களாகவும் ஒளி, நிலத்தில் இலைகளினூடு விழுந்து ஒளிரும் அழகை ஒளிவிரல்கள் நிலத்துக்கிட்ட பொட்டாகவும் காட்டப்படுவது மகிழ்வளிப்பன. "தன்னுலகு" கவிதையும் அழகியல் சார்ந்த தருணமாய் விரிந்தாலும் பொருளாழமும் படிமச் செறிவும் கொண்டது.


"தொட்டி விளிம்பு வரை நிரம்பி
ததும்புகிறது நீர்
சிறிதாயெனிலும் ஓர் அழுத்தம்
நேர்கையில்
வெளியேறி ரகசியமாய்
சுவர் தழுவி வழிகிறது
………………………………
……………………………
வெய்யிற் பொழுதில் சூடாகியும்
நிலவொளி வருடலிற் குளிருற்றும்
வாழ்வொன்றியற்றிட முயல்கிறது
வெய்யிலோடு நாள் தோறும்
தான் ஆவியாவதுணராமல்"


மேற்பார்வைக்கு தொட்டி நீர் வெப்பத்தில் ஆவியாவதைக் காட்டுவது போலிருந்தாலும், பிறரின் உன்னதத்திற்காய் தன்னையறியாமலேயே தன்னை இழந்து கொண்டிருக்கும் மனித மனத்தின் மேன்மையைக் கவிதையுணர்த்துகின்றது.


சத்தியபாலன் வாழ்க்கையை அகவெளியின் பரப்பில் காண்கின்றார். தான் கைவிடப் படும் போதும் புறக்கணக்கப்படும் போதும் ஆதரவாகத் தோள் அணைக்கப்படும் போதும் தன்னுள் நிகழும் மாற்றங்களை கவிதைகளாக்குகின்றார்.


"திடீரென ஒரு நாள் இனிப்புப் பூச்சுக்கள்
கரைந்து போயின
உள்ளீடு நாவைத் தொட்டு தன் மெய்ச்சுவை
சொல்லிற்று
எழுந்த குமட்டலில் …எதிரே
நிஜத்தின் குரூர முகம்
பழைய பசுங்கனவு சோப்பு நுரைக்
குமிழியாய்
காற்றில் மெல்ல மிதந்து போயிற்று" (தரிசனம்)


கனவுகளால் சூழப்பட்டிருக்கும் வாழ்வில், உறவுகளின் ஆதரவும் தேவைகளும் சாமானிய வாழ்க்கையை வாழுகின்ற மனிதர்கள் அனைவருக்குமானவைதான். எனினும் உறவுகளின் புனித விம்பம் உடைபடும் போது ஏற்படும் வலியும் ஏமாற்றமும் தாங்க முடியாத வேதனையை ஏற்படுத்திவிடுபவை. சத்தியபாலன் இதைப் பல கவிதைகளிலும் எழுதுகின்றார்.
நம்பிக்கைகளைச் சில தடவைகள் தந்துவிடுகிற சத்தியபாலன் பல தடவைகளும் நம்பிக்கையீனங்களால் அல்லாடுகின்றார். நம்பிக்கை தரக்கூடியதல்ல சமகாலம். எல்லா நம்பிக்கைகளும் உடைந்து சிதறிய பின்னர். ஏதைத்தான் பேசுவது? ஆற்றாமைகளை அதிகமும் பேச வேண்டியிருக்கிறது. அரசியலின் குரூரம் எல்லாவற்றின் மீதும் சர்வமாய்ப் படிந்திருக்கிறது. சக மனிதனின் துயரத்துக்காக குரல் எழுப்ப முடியாத நிலத்தில் வாழும் கவிஞனின் குரலும் விம்மலும் விசும்பலுமாகத்தான்; வெளிப்படுகின்றது. தன்கே உரியதான மொழியில் சத்தியபாலன் அரசியலைப் பேசுகின்றார்.


"சென்ற திசையிலேயே
திகைத்தலைந்தன சில….
வில்லங்கமாய்ப் பிடித்து
அமர்தப்பட்டன சில
தவறான இடத்தில்
அவமதிக்கப்பட்டு
முகஞ் சிவந்து திரும்பின சில
உரிய திசையின்
இடமோ
வெறுமையாய் எஞ்ச
எனது சொற்களின் கதி
இப்படியாயிற்று
நூற்றியோராவது தடவையும்" (அர்த்தம்)


இந்தக் கவிதை சமகாலத்தின் வலி நிரம்பிய அரசியலை உரி முறையில் பதிவு செய்திருக்கின்றது. குரல் மறுக்கப்பட்ட இனத்தின் அரசியல் இயலாமையின் வலியையும்இ துயரையும் வெளிப்படுத்துகின்றது.
சத்தியபாலனின் கவிதை வெளிப்பாட்டு முறையில் மாற்றமுடையதாய் "நடுப்பகலும் நண்டுக்கோதும் அண்டங்காகமும் ஒரு உறைந்த மனிதனும்" என்னும் கவிதையிருக்கின்றது. புதியதான புரிதலை இக்கவிதை நிகழ்த்துகின்றது. கவிதையில் வரும் உறைந்த மனிதன் எமது காலத்தின் குறியீடாக பரிமாணம் கொள்வதோடு துயர்களால் சித்தம் சிதறுண்டு போகும் மனிதர்களின் குறியீடாகவும் காட்டப்படுகின்றான்.


"சந்தியில் நிற்கிறான் உறைந்த மனிதன்
கல்லில் சமைந்த
முகத்தின் சலனங்கள்
வாசிப்போரற்று
வெறித்தே கிடக்கும்
வாழ்திருந்த காலத்தே
அழுந்த எழுதப்பட்ட
அவனது இருப்பு
இன்று வெறும் நினைவின் சுவடுகளாய்";


எவராலும் கண்டு கொள்ளப்படாது. அகதி முகாங்களுக்குள்ளும் வதை முகாங்களுக்குள்ளும் அடைபட்டவர்களாய் சராசரி வாழ்வு மறுக்கப்பட்டவர்களாய் வாழும் எண்ணற்ற மனிதர்களின் துயத்தின் மொத்த உருவாக உறைந்த மனிதனை கவிதையில் காணமுடிகின்றது.
பலமான மொழிப் பிரயோகம் மிக்க கவிதைகளைக் கொண்ட இத் தொகுப்பில் சில கவிதைகள் அதீத சொற் சேர்க்கையுடன் கூடிய கவிதைகளாக இருக்கின்றன. தானே எல்லாவற்றையும் சொல்லிவிட வேண்டும் என சத்தியபாலன் நினைக்கின்றார். இது வாகனுக்கு ஏற்படும் வாசிப்பு உந்தலுக்கு தடையாக அமையக்கூடிய சாத்தியங்களை ஏற்படுத்துகின்றன. இதனையே பின்னுரையில் பா.அகிலன் "பல இடங்களில் மௌனத்தின் பாதாளங்களைச் சொற்களிட்டு சத்தியபாலன் நிரப்பி விடுகிறார்" என்கின்றார்.
"கண்ணே உறங்கு" என்ற கவிதை நேரடித்தன்மை கொண்டதோடு. கருத்துக் கூறலாகவும் உபதேசிப்பின் குரலாகவும் இருக்கின்றது.


"புன்னகையின் நேசம் மெய்
உபசரிப்பின் பரிவு மெய்
பற்றிக் கொள்ளும் கையின் இறுக்கம்
உதவ முன் வரும் மனசின் தாராளம்
தலை சாய்க்கும் மடியின் இதம்
எல்லாம் உண்மை
நம்பு நம்பு"


இவ் வரிகள் பழகிப்போன எழுத்து முறையின் தொடர்ச்சியாக அமைகின்றதே தவிர புதியதான வாசிப்பு அனுபவத்தை தருவதாக அமையவில்லை. சில கவிதைகளில் சொற்களை தனித்தனியாக ஒரு வரிக்கு ஒரு சொல்லாக உடைத்துடைத்துப் போடுகின்றார். சொற்களுக்கிடையிலான வெளி கூடும் போது வாசிப்பு மனநிலையும் குலைந்துபோகிறது. சில வேளைகளில் சலிப்புணர்வும் ஏற்படுகின்றது. "காணல்" என்ற கவிதை முழுமையும் இவ்வகையில் அமைந்துள்ளது.


சத்தியபாலனின் "இப்படியாயிற்று நூற்றியோராவது தடவையும்" என்ற இக் கவிதைத் தொகுதி வெளிப்பாட்டு முறையிலும் பொருளாழத்திலும் கணிப்பிற்குரியதாக இருப்பதுடன். சமகாலத்தின் மீதான மீள் வாசிப்பாகவும் இருக்கின்றது.